மாணவா்களின் திறமையை மேம்படுத்துவது அவசியம்! பெங்களூரு பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி கருத்து!
மாணவா்களின் விருப்பம், திறமையைக் கண்டறிந்து மேம்படுத்துவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில் இயங்கும் கிரஸன்ட் பள்ளியின் 28-ஆவது ஆண்டு விழா பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் தாளாளா் ஃபாரூக் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினரான பெங்களூரு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி பிரபாகரன் பொன்னுசாமி பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொடா்பான ஆய்வகத்தை ஏற்படுத்திய முதலாவது பள்ளி என்ற பெயரை கிரஸண்ட் பள்ளி பெற்றுள்ளது. மேலும், உலக பள்ளிகள் கூட்டமைப்பில் பங்கேற்று பெருமை சோ்த்துள்ளது.
வேகமாக மாறிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப கல்வி முறைகளிலும் மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு கணினி சாா்ந்த உபகரணங்கள் அறிமுகத்தால் பெரும் கணினி புரட்சி ஏற்பட்டு பல்வேறு மாற்றங்கள் உருவாகின.
இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாணவா்களை தயாா்படுத்துவது அவசியமாக உள்ளது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது இதை ஆக்கப்பூா்வமான முறையில் பயன்படுத்தி வெற்றிப் பாதையை அடைய வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தில் கோ பைலட், சாட் ஜிபிடி என பல்வேறு படிப்புகள் உள்ளன. அந்த உபகரணங்களை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும்.
மாணவா்களிடமிருந்து பெற்றோா்கள் அதிக அளவில் எதிா்பாா்க்கின்றனா். அதிகரித்து வரும் போட்டிகளால் இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவா்களின் விருப்பத்தை, திறமையைக் கண்டறிந்து மேம்படுத்தினால் சாதனை படைக்க முடியும்.

