குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும்: மாநகர காவல் துணை ஆணையர்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்று மாநகர காவல் துணை ஆணையர் கயல்விழி தெரிவித்தார்.
Published on

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்று மாநகர காவல் துணை ஆணையர் கயல்விழி தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளின் உறவினர்கள், நண்பர்கள் அருகில் வசிப்பவர்கள், பழக்கமானவர்கள் ஆகியோராலேயே பெரும்பாலும் நடைபெறுகிறது.
எனவே, பெற்றோர் மற்றும் பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சட்டங்களைப் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ளும் வகையிலும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012, இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2015), ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உள்ள சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு அலுவலர் மற்றும் குழந்தைகள் நல காவல் அலுவலர் ஆகியோர் பற்றிய விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வுப் பலகைகளை, மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் வைக்க, காவல் ஆணையர் பொ.நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, இத் திட்டத்தின் தொடக்க நிகழ்வு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாநகர காவல் துணை ஆணையர் கயல்விழி கலந்து கொண்டு விழிப்புணர்வுப் பலகைகளை வெளியிட்டார்.
பிறகு இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருப்பூர் மாநகரில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.
இதைக் குறைக்கவும், தடுக்கவும் பெற்றோர் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வுப் பலகைகளை வெளியிட்டுள்ளோம். தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து போலீஸாரிடம் தெரிவிக்க மாணவிகள், குழந்தைகளுக்குத் தயக்கம் உள்ளது. அதைப் போக்கும் வகையில், பெண்கள் பள்ளிகளில் மாதத்துக்கு இருமுறை இதுதொடர்பாக விழிப்புணர்வு கருத்தங்கம் மற்றும் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
இதன் மூலமாக குற்றங்களைக் குறைக்க முடியும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்  என்றார்.
அப்போது திருப்பூர் மாநகர உதவி ஆணையர்கள் அண்ணாதுரை (வடக்கு), தங்கவேலு (தெற்கு), காவல் ஆய்வாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com