வெள்ளக்கோவில் அடுத்த மூலனூரில் ஏற்கெனவே திருமணமானதை மறைத்து இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட விவசாயி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மூலனூர், சின்னவரப்பட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் சிவசெல்வராஜ் (36). விவசாயி. இவருக்கும் மூலனூர் பட்டுத் துறையைச் சேர்ந்த செல்லமுத்து மகள் சிவசெல்வி (27) என்பவருக்கும் 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தாராபுரம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிவசெல்வராஜ் விபத்தில் சிக்கினார். அருகிலிருந்தவர்கள் மீட்டு அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருடைய செல்லிடப்பேசியில் அவர் அடிக்கடி பேசியிருந்த ஒரு எண்ணுக்குத் தொடர்பு கொண்டு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. எதிர்முனையில் ஒரு பெண் பேசியுள்ளார்.
இதையடுத்து கோவை, கருமத்தம்பட்டியைச் சேர்ந்த விஜி என்பவர் அவருடைய மனைவியெனக் கூறி, தனது 4 வயது மகனுடன் தாராபுரம் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதேசமயம் தகவலறிந்து சிவசெல்வியும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இதையடுத்து தனது கணவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தது சிவசெல்விக்கு தெரியவந்தது. பின்னர் சிவசெல்வி கொடுத்த புகாரின் பேரில், மூலனூர் காவல் ஆய்வாளர் வனிதாமணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில், சிவசெல்வராஜ், விஜியை 2006 - ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அடுத்து சிவசெல்வியையும் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் எனத் தெரியவந்தது. முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்ததாக சிவசெல்வராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.