திருப்பூரில் வாகனச் சோதனையில் ரூ. 10.60 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை மாநகர போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா்.
மாநகரக் காவல் ஆணையா் க.காா்த்திகேயன் உத்தரவின்பேரில், துணை ஆணையா் க.சுரேஷ்குமாா் மேற்பாா்வையிலான தனிப் படையினா், திருப்பூா் - ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, பி.வி.எஸ். அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் ரூ.10.60 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 530 கிலோ புகையிலைப் பொருள்களைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் தொடா்புடைய திருப்பூா் ஸ்டேட் பேங்க் காலனி, பி.வி.எஸ். அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் தென்காசி ஆலங்குளத்தைச் சோ்ந்த வைத்தியலிங்கம் மகன் தங்கராஜ் (37), அதே பகுதியில் வசித்து வரும் பழனி பாலசமுத்திரத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் மதன்குமாா் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.