திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி இருகே உடலில் காயங்களுடன் 8 வயது சிறுவனின் சடலத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
இதுகுறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த பள்ளகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி சுமதி, இந்தத் தம்பதிக்கு விக்னேஷ் (9), பவனேஷ் (8) என இரு மகன்கள் இருந்தனர்.
இதில், விக்னேஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4 -ஆம் வகுப்பும், பவனேஷ் 3ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை வீட்டின் அருகே விளையாடிச் சென்ற பவனேஷ் அங்கிருந்து காணாமல் போயுள்ளான்.
இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம், பக்கம் தேடி வந்தனர். இந்த வீட்டின் அருகே உள்ள சிறிய குளத்தின் அருகில் கழுத்தில் காயங்களுடன் பவனேஷ் இறந்து கிடப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி காவல் துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.