தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி தொழிலாளி பாலியானார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஒட்டன்சத்திரம் செல்லும் புறவழிச்சாலை வழியில் உள்ளது அமராவதி புதிய ஆற்றுப்பாலம். இதன் கீழ் இன்று சனிக்கிழமை போடியை சேர்ந்த மனோகரன் மகன் ரஞ்சித்குமார்( 23), இவரது மனைவி கல்பனா( 20), இருவரும் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது ரஞ்சித்குமார் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார் மனைவி அப்பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நபர்களை அழைத்து காப்பாற்றும்படி கதறினார்.
ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அங்கிருந்து நபர்கள் தாராபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய ரஞ்சித்குமாரை ஒரு மணி நேரம் போராடி சடலமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடலை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் முதல்கட்ட தகவல் ரஞ்சித்குமார் கல்பனா இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூர் மாவட்டம் அவிநாசி வாஷிங்டன் நகர் பகுதியில் வெல்டிங் வேலை பார்த்து வந்ததாகவும், கரோனா வைரஸ் பரவி வருவதால் ரஞ்சித்குமார் தனது மனைவியுடன் தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு செல்வதற்காக தாராபுரம் பேருந்து நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து கையில் காசு இல்லாததால் நடந்தே போடிக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர்.
இடையில் தாராபுரம் அமராவதி ஆற்றை கடக்கும் பொழுது தண்ணீரை பார்த்து குளித்து விட்டு செல்வதற்கு இருவரும் முடிவெடுத்து அமராவதி ஆற்றில் இறங்கிய போது இச்சம்பவம் நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 15ஆம் தேதி இதே பகுதியில் மகேந்திரன் என்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலியானார். கடந்த 6 நாட்களுக்குள் அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி இருவர் பலியான சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.