திருப்பூர் அருகே பழைய பஞ்சு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன.
திருப்பூர், காங்கயம் சாலை அமர்ஜோதி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்காதர்(54), இவர் காசிபாளையம் அருகே பின்னலாடைத் துணிகளை பஞ்சாக மாற்றும் கிடங்கை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர்.
இந்தநிலையில், அப்துல்காதரின் கிடங்கில் உள்ள பஞ்சு பொதியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் கரும்புகை வருவதைப் பணியாளர்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, புகையை அணைக்க பணியாளர்கள் முயற்சி செய்தபோது தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் பணியாளர்கள் அனைவரும் குடோனை விட்டு வெளியேறி விட்டனர்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும், திருப்பூர் ஊரக காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் குடோனில் பரவியை தீயணை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் மற்றும் குடோனில் இருந்த இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து திருப்பூர் ஊரக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.