காங்கயம் அருகே வயதான தம்பதியினர் கொடூரக் கொலை: காவல்துறை தீவிர விசாரணை

காங்கயம் அருகே, வயதான தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயதான தம்பதியினர் வசித்து வந்த வீடு
வயதான தம்பதியினர் வசித்து வந்த வீடு
Published on
Updated on
1 min read

காங்கயம் அருகே, வயதான தம்பதியினர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், தம்மரெட்டிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ரங்காம்பாளையம் பகுதியில் தனியே வசித்து வந்தவர்கள் பழனிச்சாமி (72), வள்ளியம்மாள் (68) தம்பதியினர். இவர்களது வீடு கணபதிபாளையம்-கீரனூர் சாலையில் அமைந்துள்ளது. வீட்டுக்கு முன்பாக இவர்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், இரண்டு பசு மாடுகள் வளர்த்து, பால் கறந்து விற்று வருகின்றனர்.

இவர்களது மகன் சந்திரசேகருக்குத் திருமணமாகி, திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர்களது மகள் மேகலாவுக்கு திருமணமாகி, நத்தக்காடையூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில், இவர்களது வீட்டுக்கு பால் எடுத்துச் செல்பவர் வந்துள்ளார். வழக்கமாக, இவர் வரும் நேரத்துக்கு பால் கறந்து, கம்பிவேலி வாசலுக்கு அருகே, பால் நிரம்பிய கேன் தயாராக வைக்கப்பட்டிருக்கும். ஆனால், புதன்கிழமை அதிகாலை பால் கேன் எதுவும் இல்லாததால், பால் எடுத்துச் செல்பவர் பழனிச்சாமியின் வீட்டுக்குள் வந்து பார்த்துள்ளார்.

அங்கே பழனிச்சாமியும், அவரது மனைவி வள்ளியம்மாளும் ரத்த வெள்ளத்தில், கொடூரமாகக்  கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இவர்கள் இருவரும் முகம் மற்றும் தலையில் கத்தியால் குத்தப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும், நைலான் கயிறு கொண்டு கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும், கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, தகவல் அறிந்த வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்க் சாய், காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருப்பூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயம் சேகரித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில், வள்ளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது. மேலும், அவர் காதுகளில் அணிந்திருந்த தங்கக் கம்மல் அப்படியே இருந்துள்ளது.

கொல்லப்பட்ட இருவரின் சடலங்களை போலீசார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் திருட்டுச் சம்பவமா அல்லது வேறு எதுவும் தனிப்பட்ட காரணங்களா? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது பழனிச்சாமிக்குத் தெரிந்த நபர்களா அல்லது கூலிப் படையினரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com