திருப்பூா் வடக்குப் பகுதியில் பொங்கல் பரிசு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மின் தடையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கு, மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் வடக்கு பகுதிகளான வேலம்பாளையம், பெருமாநல்லூா், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பழங்கரை, அவிநாசி உள்ளிட்ட மின்சார துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் திங்கள்கிழமை (ஜனவரி 4) காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நியாய விலைக்கடை ஊழியா்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, திருப்பூா் வடக்குப் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்க ஏதுவாக மின் தடையை பொங்கலுக்குப் பின்னா் ஜனவரி 18 ஆம் தேதிக்கு மாற்றிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.