வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சேலம் மாவட்டம், எடப்பாடி பக்கமுள்ள குள்ளம்பட்டி குறுக்கப்பாறையூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் பூபதி (25). லாரி ஓட்டுநர். இவர் மாதேஷ் என்பவருடைய ரெடிமேட் கான்கிரீட் டேங்கர் லாரியில் திருச்சி டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து கான்கிரீட் கலவை ஏற்றிக் கொண்டு கோவை மாவட்டம் சூலூருக்குச் சென்று கொண்டிருந்தார்.
வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளையம் பிரிவருகே கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்த போது சாலை நடுவில் இருக்கும் சிமெண்ட் தடுப்பின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் பூபதி லாரி கேபினுக்குள் சிக்கிக் கொண்டார்.
தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து தலைமை காவலர்கள் தண்டபாணி, முத்துராமலிங்கம், காவலர்கள் அஷ்ரப், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் லாரியின் முன்புற கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை உயிருடன் மீட்டனர். மீட்புப் பணியின் போது சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.