திருப்பூரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரூ.4.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாகப்பணியாற்றிய 69 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், பல்வேறு அரசுத்துறை மற்றும் கரோனா முன்களப்பணியற்றிய தன்னார்வலர்கள் 106 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதையும் படிங்க | 75ஆவது சுதந்திர தினம்: நீலகிரியில் உற்சாக கொண்டாட்டம்
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் வே.வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பளர் கோ.சஷாங்க் சாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரோனா விதிமுறைகள் அமலில் உள்ளதால் பள்ளி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நிகழாண்டு ரத்து செய்யப்பட்டது. சுதந்திரதின விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை.
அதேபோல, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதில், மாநகர பொறியாளர் ஜி.ரவி, மாநகர் நல அலுவலர் பிரதீப் வி.கிருஷ்ணகுமார் மற்றும் உதவி ஆணையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.