வெள்ளக்கோவிலில் திங்கள்கிழமை வயதான தாய், மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், மடாமேட்டைச் சேர்ந்தவர் வீரம்மாள் (90). இவருடைய கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன். முத்தூருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இரண்டாவது மகள் நல்லமுத்து புற்று நோயால் கடந்த வருடம் இறந்து விட்டார்.
திருமணமான மூத்த மகள் தற்போது 70 வயதான பழனியம்மாளின் கணவர் இறந்து விட்டார். குழந்தை இல்லை. விசைத்தறித் தொழில் செய்து வரும் மடாமேட்டிலுள்ள தனது மகன் மணி வீட்டுக்கு அருகில் ஒரு குடிசையில் வீரம்மாள், பழனியம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் வீரம்மாள், பழனியம்மாள் இருவரும் குடிசையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். வயோதிகம் காரணமாக மற்றவர்களுக்குச் சிரமம் கொடுக்கக் கூடாதென தற்கொலை முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.