

திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தேரோட்டத்தில், அரோகரா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீர்க்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் தேர்த் திருவிழா பிப்.11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா நடைபெற்றறன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதிகாலையில் விநாயகர், திருமுருகநாதர், வள்ளி, தெய்வானை, பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு
எழுந்தருளி ரத தரிசனம் நடைபெற்றது.
மாலை 4 மணி அளவில் திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
முதலில் திருமுருகநாதர்சுவாமி(சோமாஸ்கந்தர்) தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சண்முகநாதர் திருத்தேர்(வள்ளி தெய்வானை உடனமர் சண்முகநாதர்) தேரோட்டம் நடைபெற்றது.
பிறகு அம்பாள் முயங்குபூண் முலைவல்லியம்மை தேரோட்டம் என மூன்று தேர்களும் ஒரே நாளில் இழுக்கப்பட்டது. இதில் திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் தேரோட்டம் நடைபெற்றது.
திருமுருகன்பூண்டி காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி நிர்வாகத்தினர், கூடுதல் எல்இடி மின்விளக்குகள் பொருத்தி, குடிநீர் வசதியுடன், தூய்மைப் பணி மேற்கொண்டனர். 19ஆம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியும், 20ஆம் தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழாவும் நடைபெறுகிறது. 21ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 22ஆம் தேதி மஞ்சள் நீர் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் தேர்த்திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.