திருப்பூர்: ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதைக் கண்டித்து ஏற்கெனவே அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆழியாற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்வது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பிஏபி பாசனத்திட்டத்தில் 4.25 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், இந்தத் திட்டத்தில் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு குறையும் என்பதால் விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
ஆகவே, ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் வரும் ஜூன் 27 ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு, பாலாறு பாசன சங்க பிரதிநிதிகளுடன் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிக்க: அதிமுக பொதுக் குழு வழக்கில் சற்று நேரத்தில் இடைக்கால உத்தரவு
அப்போது பேச்சுவார்த்தை மூலமாகத் தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்பதால் ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதுதொடர்பான அனைத்து சங்கங்களுடனும் ஆலோசனை நடத்தி முடிவைத் தெரிவிக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், பாசன சபை சங்க நிர்வாகிகள், பொள்ளாச்சி பகுதி வணிகர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து திருமூர்த்தி நீர்த்தேக்க முன்னாள் திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் புதன்கிழமை கூறியதாவது:
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோளின்படி பாசன சபை சங்க நிர்வாகிகள், வணிகர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அரசு சார்பில் அரசாணையை ரத்து செய்வதாக உறுதியான முடிவைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரசுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டமாக மாற்றிக் கொள்வோம்.
அதே வேளையில், அரசு சார்பில் அரசாணையை ரத்து செய்வது தொடர்பாக உறுதியளிக்காவிட்டால் ஏற்கெனவே அறிவித்தபடி வரும் ஜூன் 27 ஆம் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.