திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் கந்தர் சஷ்டி திருவிழா புதன்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு திருமுருகநாதசுவாமி கோயிலில் தினசரி காலை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரமும் நடைபெற்று வந்தது. மேலும் இதில் முருகபக்தர்கள் புனித நீராடி, அங்கப்பிரதட்சனம் செய்து கூட்டு வழிபாடு செய்தனர்.
முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை சண்முகநாதர் சுவாமி அன்னையிடம் சக்திவேல் வாங்கி, சண்முகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹரா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கஜமுகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன்ஆகியோரை வதம் செய்த பிறகு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து சுவாமி வெற்றிவாகை மாலை சூடுதல், சேவல்கொடி சாற்றுதல் மற்றும் சுவாமியை சாந்தப்படுத்தும் விதமாக உற்சவருக்கும், மூலவருக்கும் மகா அலங்காரம், மகா அபிஷேகம், மகாதீபாராதனைகள் நடைபெற்றது.
திருமுருகன்பூண்டியில் சூரனை வதம் செய்ய திருத்தேரில் அருள்பாலித்த சண்முகநாதர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திங்கள்கிழமை சண்முகநாதர் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. பக்தர்கள் மொய் பணம் எழுதுதல், பாதகாணிக்கையடுத்து, வெள்ளையானை வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமண்ய சுவாமி திருவீதி உலாவருதல் நடைபெறுகிறது. மதியம் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்படுகின்றது. இதே போல அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில், சேவூர் வாலீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் கந்தர்சஷ்டி விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.