அவிநாசி: அவிநாசி அருகே தேவாராயம்பாளையத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து தொடர்ந்து காலதாமதமாக வருவதால் அவதியுற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் திடீரென செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னலாடை நகரமான திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தேவாராயம்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பனியன் நிறுவனத் தொழிலயே பிரதானமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், நாள்தோறும் 1ஜி, 11பீ ஆகிய இரு பேருந்துகளும், ஒரு தனியார் பேருந்தும் இயக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது, 11பீ பேருந்து இயக்கப்படுவதில்லை. 1ஜி பேருந்து காலை, மாலை இயக்கப்படுகிறது. இருப்பினும் நாள்தோறும் இரு வேலையும் காலதாமதமாக வருவதால், நீண்ட நேரம் காத்திருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் அவதியுற்று வந்தனர். மேலும் தனியார் பேருந்தும் மாற்று வழித்தடத்தில் இயக்கபடுவதால், தொடர்ந்து சிரமத்திற்குள்ளான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை தேவராயம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகலலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெகநாதன், திருப்பூர் போக்குவரத்து கிளை மேலாளர் ஜெகதீஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்து வரும்படி செய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.