பல்லடம் அருகே மோசடி நபருக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமைக் காவலரை பணி நீக்கம் செய்து திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங் சாய் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் காவல் உட்கோட்டம் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் ஜெகநாதன். இவா் கடந்த 2021ஆம் ஆண்டு மோசடி வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த வாசுகுமாா் என்பவருக்கு தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளாா். மேலும் அதே ஆண்டு அவிநாசிபாளையம் காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்க வந்த காா்த்திகா பிரியதா்ஷினி என்ற இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தலைமைக் காவலா் ஜெகநாதன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டதால் திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சஷாங் சாய், தலைமைக் காவலா் ஜெகநாதனை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.