

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக கருணம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வர் கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் உத்தராயின காலமான மாசி, பங்குனி மாதத்தில் அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்போது சூரிய பகவான் அவிநாசிலிங்கேஸ்வரரை வணங்கிச் செல்வது ஐதீகம். இந்த ஆண்டு புதன்கிழமை சூரிய உதயத்தின் போது, பழமையான இக்கோயிலின் ராஜகோபுரம் வழியாக சூரிய ஒளி செங்கதிராக, அவிநாசிலிங்கேஸ்வரர் மீது விழுந்து வணங்கியது. அப்போது செந்நிறமாக அவிநாசிலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 6.45 மணிக்கு தொடங்கி, 5 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மீது நிலையாக இருந்து, படிப்படியாக மறைய ஆரம்பித்தது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்வு ஒரிரு நாள்களுக்கு காலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு இரு முறை சூரிய ஒளி விழும் நிகழ்வு
கடந்த ஆண்டு 2023 தட்சிணாயின காலமான( புரட்டாசி) செப்டம்பர் 30-ஆம் தேதி காலை அவிநாசிலிங்கேஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை சூரிய ஒளி விழும் நிகழ்வு சிறப்புக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.