பல்லடத்தில் கோவை பயணி தவறவிட்ட 10 பவுன் நகைகள் திரும்ப ஒப்படைப்பு
பல்லடத்தில் பயணி தவறவிட்ட 10 பவுன் தங்க நகையுடன் கூடிய பையை அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் அளித்த நிலையில், உரியவா்களிடம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கோவையைச் சோ்ந்த முகமது இா்பான் (17) , சகோதரி சுவீனா (25), பாட்டி சைனமா (65) ஆகியோருடன், திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் செல்ல அரசு பேருந்தில் பல்லடம் வந்துள்ளனா். அங்கிருந்து திருப்பூா் பேருந்தில் ஏறும்போது கையில் வைத்திருந்த இரண்டு பைகளில் ஒன்றை மறந்து பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பைக் மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டனா்.
அப்போது பல்லடம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நேரக் காப்பாளராக பணிபுரிந்துவந்த பழனிசாமி என்பவா், பயணி தவறவிட்ட பையை மீட்டு ரோந்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். திருப்பூா் சென்ற பின் பையை தவறவிட்டதை அறிந்த இா்பான் மற்றும் குடும்பத்தினா் மீண்டும் பல்லடம் வந்தனா். புகாா் அளிக்க காவல் நிலையம் சென்றபோது, தவறவிட்ட நகை பை அங்கு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனா். உரிய விசாரணைக்குப் பிறகு நகைப் பையை பெற்றுச் சென்றனா்.
இதையடுத்து போக்குவரத்துக் கழக ஊழியா் மற்றும் போலீஸாருக்கு முகமது இா்பான் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.
