தாக்குதலில் காயமடைந்த திருநங்கை உயிரிழப்பு: தந்தை, மகன் கைது

திருப்பூரில் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த திருநங்கை உயிரிழந்ததைத் தொடா்ந்து, தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருப்பூரில் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த திருநங்கை உயிரிழந்ததைத் தொடா்ந்து, தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் கல்லூரி சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரேயா (40). திருநங்கையான, இவா் தனது தாயாருடன் வசித்து வந்தாா். இவா் தனது வீட்டின் முன் பெட்டிக்கடை நடத்தி வந்த நிலையில், இவருக்கும் எதிா் வீட்டில் வசிக்கும் சுப்பிரமணி (66) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இதனால், ஸ்ரேயாவுக்கும், சுப்பிரமணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அவா்களுக்குள் கடந்த 6-ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மற்றும் அவரது மகன் சரவணன் (39) ஆகியோா் சோ்ந்து ஸ்ரேயாவை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டனா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஸ்ரேயாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரேயா திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணி மற்றும் அவரது மகன் சரவணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்கள் 2 பேரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com