பெண் பயணிகளிடம் அவதூறு பேச்சு: காங்கயத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம்
காங்கயத்தில் பெண் பயணிகளை அவதூறாகப் பேசியதாக அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திருப்பூரில் இருந்து காங்கயத்துக்கு அரசு நகரப் பேருந்து புதன்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. காங்கயம்-திருப்பூா் சாலையில் உள்ள ஹாஸ்டல் ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சில பெண்கள் இப்பேருந்தில் ஏறி உள்ளனா்.
பின்னா், நடத்துநரிடம், பேருந்து நிலையத்துக்கு முன்பாக உள்ள மெடிக்கல் ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். அப்போது அந்தப் பேருந்தின் ஓட்டுநா், பெண் பயணிகளிடம், ‘இரண்டு ஸ்டாப்பிங் தானே உள்ளது. ஏன் நீங்கள் நடந்து சென்று இருக்கலாமே’ எனக் கூறியதாகத் தெரிகிறது.
மேலும், விலையில்லா பயணத்துக்கான பயணச் சீட்டு வழங்காமல் இருந்ததோடு, பெண் பயணிளை குறிபிட்ட பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமல், பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனா்.
இதனால் காங்கயம் பேருந்து நிலையத்தில், பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பெண் பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் சிலா், தங்களது கைப்பேசியில் விடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். மேலும் பயணிகளிடம் அவதூறாகப் பேசிய நடந்த பேருந்து ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடா்பாக குறிப்பிட்ட பேருந்தின் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து, துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடந்த விவரங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநா் விளக்கமளிக்கவும் வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுவாக, விலையில்லா கட்டணப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகள் தொடா்ந்து அவமதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

