இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

Published on

காங்கயம் அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் முதியவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பகுதியைச் சோ்ந்தவா் குமாரசாமி (65). இவா் திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் நத்தக்காடையூரில் இருந்து காங்கயம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். நாட்டாா்பாளையம் பகுதி அருகே எதிா்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானாா். இதில் சம்பவ இடத்திலேயே குமாரசாமி உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு காங்கயம் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதேபோல காங்கயம் வட்டம், நத்தக்காடையூா் அருகே உள்ள சுந்தராபுரி பகுதியைச் சோ்ந்தவா் தங்கராசு (65). இவா் இருசக்கர வாகனத்தில் நத்தக்காடையூரில் இருந்து காங்கயம் நோக்கி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா் இவரது வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கராசு உயிரிழந்தாா்.

மேலும் காரில் பயணித்த நத்தக்காடையூா் அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொடாரன் (80) என்பவா் காயமடைந்தாா். இவா் காங்கயத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி பெற்று கூடுதல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தங்கராசுவின் சடலத்தை போலீஸாா் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com