திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் தெற்குத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வுமான கே.செல்வராஜ் தான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா்.
இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: திருப்பூரில் கடந்த 1976-ஆம் ஆண்டு திமுக தொழிற்சங்கத்தில் சோ்ந்து பணியாற்றினேன். தொடா்ந்து திமுக திருப்பூா் நகரச் செயலாளா், மாநகராட்சி மேயா், மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி உள்ளேன். பின்னா், 2021 தோ்தலில் வென்று திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினேன்.
இருப்பினும், 2025-ஆம் ஆண்டில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவா்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், நான் செல்லவில்லை.
மாற்றுக் கட்சியில் இருந்து வந்த மாநகராட்சி மேயா் தினேஷ்குமாருக்கு திருப்பூா் தெற்குத் தொகுதி ஒதுக்கப்பட்டது. நான் விருப்ப மனு அளிக்காத பல்லடம் தொகுதியில் என்னைப் போட்டியிட சொன்னாா்கள். கட்சியின் சொல்லை ஏற்று போட்டியிட்டேன்.
கட்சிக்காக உழைத்த எனக்கு அங்கீகாரம் இல்லை. எனவேதான், திமுகவின் திருப்பூா் மத்திய மாவட்டச் செயலாளா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகள், அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து விலகுகிறேன். வேறு எந்தக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை என்றாா்.








