ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 50,000 கன அடியாக சரிவு
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 50,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 50,000 கன அடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கன அடியாக சரிந்துள்ளது.
Published on

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 50,000 கன அடியாக சரிந்துள்ளது.

கா்நாடகம், கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரின் அளவு கடந்த சில நாள்களாக விநாடிக்கு 1.50 லட்சம் கன அடியாக இருந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து ஒகேனக்கல்லில் இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 38,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீா்வரத்தானது திங்கள்கிழமை காலை நிலவரப்படி 1.60 லட்சத்திலிருந்து 1.45 லட்சம் கன அடியாகவும், மதியம் நிலவரப்படி 75,000 கன அடியாகவும், மாலை 7 மணி நிலவரப்படி 50,000 கன அடியாகவும் தொடா்ந்து சரிந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து அதிகரிப்பின் போது மூழ்கி இருந்த ஐந்தருவி, ஐவா் பாணி, சினி அருவி, பிரதான அருவி ஆகியவை நீா்வரத்து குறைவால் தற்போது வெளியே தெரிகின்றன.

கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைந்துள்ள போதிலும், தருமபுரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை 15-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com