ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் முக்கிய இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒகேனக்கல்லுக்கு ஏராளமானோா் வந்ததால் முக்கிய இடங்களான நடைபாதை, மீன் விற்பனை நிலையம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
ஒகேனக்கல் பகுதியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் கணவாய்ப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி மலைகள், மேகங்களை புகைப்படம் எடுத்தனா்.
காவிரி ஆற்றில் நீா்வரத்து ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளதால் அருவிகளில் நீா்வரத்து குறைந்தது. எனினும், சுற்றுலாப் பயணிகள் மூலிகை வகை எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்து பிரதான அருவி, சினி அருவிகளில் குளிப்பதைக் காட்டிலும், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் பாதுகாப்பு உடையுடன் தொம்பச்சிக்கல் வழியாக ஐந்தருவி, பெரியபாணி வழியாக மணல்மேடு வரை பரிசலில் பயணித்து காவிரி ஆற்றில் பாறைகளுக்கு இடையே கொட்டும் அருவிகள், குகைகள், முதலை வாய்க்கால் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, கெளுத்தி, பாப்லெட், பாறை, சோனா கெளுத்தி, கல்பாசை உள்ளிட்ட வகை மீன்களின் விலை ரூ. 150 முதல் ரூ. 1,500 வரை விற்பனை செய்யப்பட்டது.
அசைவப் பிரியா்கள் மீன்களை வாங்கிச் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருந்து, பின் சமைத்து காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அமா்ந்து உணவு அருந்தினா் .
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஒகேனக்கல் பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா வாகனங்கள் சின்னாறு நீா் அளவிடும் பகுதி முதல் காவல் நிலையம், சத்திரம், முதலைப்பண்ணை, எட்டாமலை, பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு உணவக வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன . மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன . 30க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

