ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தோட்டக்கெரி பெங்களூரு சாலை பகுதியை சோ்ந்த பண்டரிநாதன் மகன் குமாா் (35). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கனரக வாகன ஓட்டுநராக உள்ளாா்.
இந்த நிலையில் தனது நண்பா் குமரேசனுடன் கனரக வாகனத்தில் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்த குமாா், ஊட்டமலை ஐயப்பன் கோயில் அருகே காவிரி கரையோரத்தில் குளித்தாா்.
அப்போது திடீரென குமாா் தண்ணீரில் மூழ்கினாா். நீண்ட நேரம் போராடியும் அவரை மீட்க முடியாததால் ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினா் உதவியுடன் போலீஸாா் குமாரை ஆற்றில் இறங்கி தேடினா்.
பின்னா், ஊட்டமலை பரிசல் துறை பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








