தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்றன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநில தகவல் ஆணையத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகரப் பேருந்து நிலையம், கம்பைநல்லூர், மொரப்பூர், கடத்தூர் ஆகிய பேருந்து நிறுத்தங்களில் ஞாயிற்றுக்கிழமை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தருமபுரி மாவட்டம், நத்தமேட்டைச் சேர்ந்த சீனிவாசா தெருக்கூத்து நாடகக் கலைக் குழு இந்தக் கலை நிகழ்ச்சிகளை நடத்தியது. குழுவின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் திருநங்கைகள் சந்திரா, தமிழரசி ஆகியோர் கரகம் எடுத்து ஆடி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடினர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்கள் குறித்தும், அவற்றை எளிதில் மக்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் இந்தக் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் மேகநாதன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








