அதிமுக கிளைச் செயலர் மீது தாக்குதல் சம்பவம்: அமமுகவினர் 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

மொரப்பூர் அருகே அதிமுக கிளைச் செயலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 6 பேருக்கு அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது
Updated on
2 min read

அரூர்: மொரப்பூர் அருகே அதிமுக கிளைச் செயலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 6 பேருக்கு அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

தருமபுரி மாவட்டம், அரூர்-மொரப்பூர் நெடுஞ்சாலையில், தம்பிசெட்டிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சுற்றுச் சுவரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் குறித்த சுவர் விளம்பரம் எழுதும் பணியில் அக்கட்சியினர் கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஈடுபட்டனர். அப்போது, தம்பிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் ஆறுமுகம் (62) என்பவருக்கும், எச்.அக்ராஹரத்தைச் சேர்ந்த அமமுக நிர்வாகி கனகராஜ் (26) ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதையடுத்து ஏற்பட்ட தகராறில் அதிமுக கிளைச் செயலர் ஆறுமுகம் மீது, அமமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், அமமுக கழக அமைப்பு செயலர் முருகன், கட்சி நிர்வாகிகள் கனகராஜ், நரசிம்மன், சிற்றரசு, தீப்பொறி செல்வம், கமல், ஏகநாதன், தென்னரசு மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளிட்டோர் மீது 147, 148, 323, 294 (பி), 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அமமுக நிர்வாகிகள் நரசிம்மன், கே.குமார், தீப்பொறி செல்வம் ஆகியோரை ஏற்கனவே மொரப்பூர் போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அமமுக நிர்வாகிகள் தலைமறைவாக இருந்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய அமமுக அமைப்பு செயலர் முருகன், நிர்வாகிகள் சிற்றரசு, கனகராஜ், கமல், ஏகநாதன், தென்னரசு ஆகிய 6 பேரும் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்ஜாமீன் பெற்றனர். பிறகு இந்த 6 பேரும் அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் கோபால கிருஷ்ணன் அமமுக நிர்வாகிகள் 6 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதாவது, அமமுக நிர்வாகிகள் 6 பேரும் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் காவல் நிலையத்தில் 30 தினங்களுக்கு நாள்தோறும் கையெழுத்து இட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அமமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு:

மொரப்பூர் அருகே சுவர் விளம்பரம் எழுதிய அமமுக நிர்வாகிகள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாக அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலர் பி.பழனியப்பன் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது : மொரப்பூர் அருகேயுள்ள தம்பிசெட்டிப்பட்டியில் சுவர் விளம்பரம் எழுதியதாக அ.ம.மு.க நிர்வாகிகள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு பதிந்துள்ளனர். காவல் துறையினரின் இந்த செயல் கண்டிக்க தக்கது. விவசாயிகளை பாதிக்க கூடிய 3 வேளாண்மை சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார். பேட்டியின்போது அமமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலர்  டி.கே. ராஜேந்திரன் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com