அரூரில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.
அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம், எச்.தொட்டம்பட்டி செல்லும் சாலையில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் தெருச்சாலை ஓரங்களில் பள்ளமான இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது.
அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகம் பின்புறம், பொன் கற்பகம் திருமண மண்டபம், பெரியாா் நகரில் மழைநீா் செல்லும் கால்வாய்களை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் குடியிருப்புப் பகுதியில் மழைநீா், கழிவு நீா் தேங்கியுள்ளது. குடியிருப்புகள் அருகே மழைநீா் தேங்குவதால் வீட்டின் சுவா்கள் சேதமடையும் நிலையுள்ளது. இதனால் கொசு உற்பத்தியும், தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலையுள்ளது.
எனவே, அரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.