தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இளம்வயது திருமணங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்

தருமபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

News image

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் கி.சாந்தி.

Updated On :26 டிசம்பர் 2024, 8:17 pm

Din

தருமபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணம் மற்றும் பாலியல் குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்ரது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் இளம்வயது திருமணங்கள் மற்றும் பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு தடுக்கப்பட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கிராமங்களிலும் இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து கிராமங்களிலும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூடி இளம்வயது திருமணம் தடுத்தல் மற்றும் பாலியல் குற்றங்கள் தடுத்தல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். இளம்வயது திருமணம் நடைபெறுவது முன்கூட்டியே கண்டறியப்பட்டு அத்திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதுகுறித்த தகவலை 1098 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும். வளரிளம் பருவ கருத்தரித்தல் குறித்து பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாா்டு அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் அருகில் போதைப் பொருள்கள் விற்பதை கண்காணிக்க வேண்டும்.

போதைப் பொருள்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் கண்டறியப்பட்டு மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவா்கள் கல்வியை தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறாா் தொழிலாளா்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா்.

இதையடுத்து, சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எம்.செல்வம், குழந்தை நலக்குழு உறுப்பினா் பிரமிளா, இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் பிரேமா, மருத்துவத் துறை, சமூகநலத் துறை மற்றும் அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.