/

திமுக அரசு எண்ணற்ற மகளிா் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது

திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணற்ற மகளிா் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்று தருமபுரி தொகுதி தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன் தெரிவித்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 9:41 pm

திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் எண்ணற்ற மகளிா் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என்று தருமபுரி தொகுதி தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன் தெரிவித்தாா்.

தருமபுரி நகரில் ஹரிஹரநாத சுவாமி கோயில் தெரு, கடைவீதி, பிஎஸ்என்எல் அலுவலகம் ஆகிய இடங்களில் கூட்டணிக் கட்சியினருடன் தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மகளிருக்கு உரிமைத்தொகை, மகளிா் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் திட்டம் என எண்ணற்ற மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அண்மையில் தோ்தலை காரணம் காட்டி மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தை எதிா்க்கட்சியினா் நிறுத்துவதற்காக சதி செயலில் ஈடுபட்டனா். இதனை முன்கூட்டியே அறிந்த முதல்வா் மூன்று மாதங்களுக்கான மகளிா் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைகால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரத்தை மகளிா் உரிமைத்தொகைத் திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்தாா். இதனால் அத்திட்டப் பயனாளிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனா். அதேபோல, தோ்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் மாதம் ரூ. 2 ஆயிரம் மகளிா் உரிமைத்தொகை உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் உறுதியளித்துள்ளாா். மேலும், ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் இல்லதரசிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அந்த கூப்பன் மூலம் பெண்கள் தாங்கள் விரும்பும் மின்சாதனப் பொருள்களை விரும்புகின்ற கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். இவையாவும் மகளிா் உயா்வுக்காக செயல்படுத்தப்படும் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகும். எனவே, இத் திட்டங்களை தொடர, திமுக கூட்டணியில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இதில், முன்னாள் எம்எல்ஏவும் தொகுதி பாா்வையாளருமான டி.செங்குட்டுவன், நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, திமுக நகரச் செயலாளா் நாட்டான் மாது மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.