சாலை விதிமுறைகளைப் பின்பற்றி வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்க வேண்டும் என்று பர்கூர் டிஎஸ்பி பாஸ்கரன் கூறினார்.
போச்சம்பள்ளியில் காவல் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்தை அவர் தொடக்கிவைத்து பேசியது:-
ஆண்டுதோறும் இரு சக்கர வாகனங்களின் ஓட்டுநர்களே மிக அதிகமான சாலை விபத்துகளில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், உயிரிழப்பும் அதிக அளவில் ஏற்படுகிறது.
விழாக்காலங்களில் அதிக அளவில் வாகன ஓட்டிகள் சாலையைப் பயன்படுத்துவர். அப்போது, சாலை விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சாலையில் பயணிக்க வேண்டும்.
இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் தலைக்கவசங்களை அணிய வேண்டும். இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மழைக் காலங்களிலும் இரவு நேரத்திலும் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என்றார்.
பின்னர், ஜெய் ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் 50 தலைக்கவசங்களை டிஎஸ்பி பாஸ்கரன் வழங்கினர். இதையடுத்து, போச்சம்பள்ளி காவல் நிலையம் அருகேயிருந்து 300-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் பொதுமக்களுடன் போலீஸார் இணைந்து விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு பாரூர் காவல் நிலைய ஆய்வாளர் கு.கபிலன் தலைமை வகித்தார். போச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத்,
கூட்டுறவு சங்கத் தலைவர் தூயமணி, தொழிலதிபர் ரங்கநாதன், வழக்குரைஞர் அசோக்குமார், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி, செந்தில் சண்முகம், மதியழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.