கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரிக்கோடியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய தேர் திருவிழா மே.20-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அருள் தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. புனித சூசையப்பர் ஆலயத்தில் தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக, அருள் தந்தை அந்தோணி மதலைமுத்து தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, நற்கருணை ஆராதனை மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது.
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சூசையப்பர் பெரிய ஏரிக்கோடி கிராமத்தில் வலம் வந்தார். இந்தத் தேர் பவனியை அருள்தந்தை ஜார்ஜ் புனித நீரைக்கொண்டு மந்தரித்து தொடங்கி வைத்தார்.
தேர் பவனியின் போது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: ஆஸி. புதிய பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி பதவியேற்பு