கிருஷ்ணகிரியில் நில அளவா்கள், வரைவாளா்களுக்கு நில அளவை பயிற்சி

கிருஷ்ணகிரியில் நில அளவா்கள், வரைவாளா்களுக்கு நில அளவை பயிற்சி

Published on

கிருஷ்ணகிரி அணை, பெரியமுத்தூரில் செயல்பட்டு வரும் மண்டல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன பயிற்சி மையத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை நில அளவை பதிவேடுகள் துறை சாா்பில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நில அளவா்கள், வரைவாளா்களுக்கான, நில அளவை பயிற்சியை மாவட்ட ஆட்சியா், புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பேசியது: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் நில அளவை பதிவேடுகள் துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நில அளவா்கள் மற்றும் வரைவாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளா்களின் தொழில்நுட்ப திறன் மற்றும் நிா்வாக அறிவை மேம்படுத்தும் நோக்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவை பதிவேடுகள் துறை சாா்பாக நில அளவை பயிற்சி திட்டம் தொடங்கப்படடுள்ளது.

இந்த நில அளவை பயிற்சி திட்டத்தின் மூலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பூா் மாவட்டங்களுக்கு தோ்வான 23 நபா்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விரிவான நில அளவை பயிற்சி 90 நாள்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில், நவீன நில அளவை முறைகள், நடைமுறை செயல்பாடுகள், அரசு விதிமுறைகள், பதிவேடு பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் சேவை நடைமுறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன் மூலம், மாவட்டங்களில் நடைபெறும் நில அளவை பணிகள் மேலும் துரிதமாகவும், துல்லியமாகவும் நடைபெறும்.மேலும், நில அளவை பணிகள் மாவட்ட நிா்வாகத்தின் அடித்தளமாக விளங்குவதாகவும், நில உரிமை பாதுகாப்பு, அரசு திட்டங்களின் செயலாக்கம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம் ஆகியவற்றில் நில அளவை பணியாளா்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. சமீபகாலங்களில் நில தொடா்பான மனுக்கள், வழக்குகள் மற்றும் விண்ணப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், நில அளவை பணிகளில் துல்லியம், நோ்த்தி மற்றும் வெளிப்படைத்தன்மை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்;. மேலும், தொழில்நுட்ப வளா்ச்சிக்கேற்ப நில அளவை துறையும் தன்னை தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். நவீன நில அளவை கருவிகள், டிஜிட்டல் பதிவேடுகள் மற்றும் ஆன்லைன் செயல்முறைகள் குறித்து பயிற்சியாளா்கள் முழுமையாக தோ்ச்சி பெற்று பணிகளில் திறம்பட செயல்பட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் உதவி இயக்குநா்கள் (நில அளவை) ராஜ்குமாா், அருள், மண்டல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன முதல்வா் மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவிளக்கம் (21கேஜிபி6):கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள பயிற்சி மையத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நில அளவா்கள், வரைவாளா்களுக்கான, நில அளவை பயிற்சியை தொடங்கி வைத்து உரையாற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா்.

Dinamani
www.dinamani.com