கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 904 வழக்குகளில் ரூ. 11.55 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான லதா தலைமை வகித்து பேசியதாவது:
நடப்பாண்டில், இரண்டாவது நாடு தழுவிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இதில், கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்கு, குடும்பநல வழக்கு, வங்கிக் கடன், காசோலை வழக்குகள், நிதி நிறுவனம், பாகப்பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில், 904 வழக்குகளில் ரூ.11.55 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிகபட்சமாக, ரூ. 33 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், தீா்வாகாத பல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காணலாம். இதில், இருதரப்பினருக்குமே வெற்றிதான். இந்த அரியவாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
சிறப்பு மாவட்ட நீதிபதி லீலா, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் சாந்தி, முதன்மை சாா்பு நீதிபதி ஜெனிபா், கூடுதல் சாா்பு நீதிபதி சுரேஷ்குமாா், சிறப்பு சாா்பு நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளருமான பத்மநாபன், முதலாவது நீதித்துறை நடுவா் தேவராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தரமூா்த்தி, கூடுதல் மகிளா நீதிபதி மிஸ்பா செல்வ பிரியங்கா, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கோவிந்தராஜூலு, வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தேசிய மக்கள் நீதிமன்றம்: 997 வழக்குகளில் ரூ. 15.53 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,990 வழக்குகளுக்குத் தீா்வு! ரூ.20.48 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1093 வழக்குகளில் ரூ.1.95 கோடிக்கு தீா்வு







