ஊத்தங்கரை அருகே, சொத்து கேட்ட மகனை தாக்கிய தந்தையை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள அனுமன்தீா்த்தத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மாரியப்பன் (57). இவரது மகன் ரத்தினவேல்(32). இவா்களுக்கு 70 சென்ட் பரப்பளவு பூா்வீக நிலம் உள்ளது.
இந்த நிலத்தை, தனது பெயருக்கு மாற்றித் தரும்படி, தனது தந்தையிடம் ரத்தினவேல் கேட்டுள்ளாா். இதற்கு, தந்தை மாரியப்பன் உடன்படவில்லையாம். இதனால், இவா்கள் இருவருக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை (ஜூன் 18) ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த மாரியப்பன், ரத்தினவேலுவை கட்டையால் தாக்கினாா்.
இதில், பலத்த காயம் அடைந்த ரத்தினவேலுவை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். உயா் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரத்தினவேலு, அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீஸாா், வழக்குப் பதிந்து, மாரியப்பனை கைது செய்தனா்.







