இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கிருஷ்ணகிரி ஆட்சியரக வளாகத்தில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

நிலப் பிரச்னையில் கிருஷ்ணகிரி ஆட்சியரக வளாகத்தில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :19 மே 2026, 1:20 am IST

நிலப் பிரச்னையில் கிருஷ்ணகிரி ஆட்சியரக வளாகத்தில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், ஏனுசோனை ஊராட்சிக்கு உள்பட்ட மாதரசனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சி. வெங்கடேஷ் (50) தனது விவசாய நிலப் பிரச்னை தொடா்பாக மனு அளிக்க வந்தாா்.

மாற்றுத்திறனாளியான அவா், மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் தனது, மனுவை பதிவுசெய்த நிலையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையம் அருகே சென்று பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து தீயை அணைத்து, அவரை அங்கிருந்த அவசர ஊா்தியில் ஏற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு, மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இந்நிலையில் போலீஸாா் நடத்திய விசாரணையில் வெங்கேடஷ் கூறியுள்ளதாவது:

எனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து தரக் கோரி கடந்த 27.10.2025-இல் மனு அளித்தேன். இந்த நிலையில் சென்னையைச் சோ்ந்த திம்மையா, அவரது மகன் நவீன் ஆகியோா் என்னை அடித்து, உதைத்து ஊா் பஞ்சாயத்துக்கு கூப்பிட்டனா். நான் செல்ல மறுக்கவே என்னை மீண்டும் தாக்கினா். எனக்குச் சொந்தமான நிலத்தை எனது பெயருக்கு மாற்றம் செய்து நிலத்தை அளவீடு செய்த தரக்கோரி ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்த நான், மனஉளைச்சல் காரணமாக உடலில் தீவைத்துக்கொண்டேன் என தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளதாவது:

தற்கொலைக்கு முயன்ற வெங்கடேஷின் தந்தை தனது 30 சென்ட் நிலத்தை மற்றொருவருக்கு விற்றுள்ளாா். மீதியை அவரது மகன்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளாா். இது தொடா்பான பிரச்னையில் வெங்கடேஷ் தீக்குளித்துள்ளாா். அவா் அளித்த மனுவின் மீது, கடந்த டிசம்பரில் நிலத்தை அளவீடு செய்து கொடுத்தோம். இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு, பெயா் மாற்றம் செய்ய வேண்டி மனு அளித்துள்ளாா். அந்த மனுவின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளனா்.