அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் கழிப்பறைகள் போதிய முறையில் பராமரிக்கப்படாததால் மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 37,141 அரசுப் பள்ளிகள், 86 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என அரசின் அறிக்கை கூறுகிறது.
அதேவேளையில் ஏறத்தாழ 50 சதவீத பள்ளி, கல்லூரிகளில் போதுமான தண்ணீர் வசதி இல்லாதது, சரியாகப் பராமரிக்கப்படாதது போன்ற காரணங்களால் மாணவர்கள் திறந்தவெளி கழிப்பிடங்களைப் பயன்படுத்தி வருவதாகவும், மாணவிகள் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் தன்னார்வ அமைப்புகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதிப்புக்குள்ளாகும் மாணவிகள்: கழிப்பறை இல்லாததால் அதிகம் பாதிக்கப்படுவது மாணவிகள்தான். உடல் ரீதியான பாதிப்புகளுடன் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லாதது அல்லது முறையாகப் பராமரிக்கப்படாதது என்பது ஒரு சிக்கலாக நில்லாமல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் இயற்கை உபாதையை அடக்கிப் பழகும் மாணவிகள் பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு ஆளாவதுடன், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
மாதவிலக்குக் காலங்களில் மாணவிகள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகின்றனர். தூய்மையற்ற கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டு, கருப்பைப் பாதிக்கப்படுவதுடன் வெள்ளைப்படுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். மேலும், கழிப்பறை இல்லாமல் இயற்கை உபாதைகளை அடக்குவதன் மூலம் பல பெண்களுக்கு கர்ப்பப் பை கீழிறங்கி விடுகிறது, சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மகளிர் நல மருத்துவர்கள்.
விரும்பும் நேரத்தில் அனுமதி: பள்ளிகள், கல்லூரிகளில் கழிப்பறைகளைக் கட்டுவித்து மாணவர்கள் அதைப் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரம் குறித்து ஆசிரியர் கற்பிக்கும் செய்திகள் பெற்றோரையும் சென்றடைய வாய்ப்புள்ளது. எனவே, முழுச் சுகாதாரத் திட்டத்தின் முக்கியமான அம்சமாக பள்ளிச் சுகாதாரத் திட்டம் அமைகிறது
இடைவேளைகளில், உணவு வேளைகளில் ஒரே நேரத்தில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் இருக்கும் ஓரிரண்டு கழிவறைகளைப் பயன்படுத்துவதும் ஒரு சிக்கலே. இதனால் மாணவர் விரும்பும் நேரத்தில் கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
அனைத்து வீடுகளிலும் கழிப்பறை: பள்ளி, கல்லூரிகளில் கழிப்பிடத் தூய்மை என்பது பள்ளி, கல்லூரி நிர்வாகம் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. பொதுவாக கிராமங்களில் இன்றைக்கும் பெரும்பான்மை வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாத நிலையில், பள்ளியில் இருக்கும் கழிப்பிடங்களைச் சரியான முறையில் பயன்படுத்தும் அறிவினைப் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள்.
கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் இன்று கழிப்பறை கட்ட அரசு நிதி உதவி செய்து வருகிறது. இந்தத் திட்டத்தை இன்னும் வேகமாகவும் சீரிய முறையில் ஊழலுக்கு இடமளிக்காத வகையில் செய்து முடிக்கும்போது மாணவ, மாணவியர் பள்ளியிலும் சரியான முறையில் பயன்படுத்தக் கற்றுக் கொள்வர்.
பெற்றோரின் கடமை: வளரும் இளம் குழந்தைகளுக்குக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தக் கற்பித்தல் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். மூன்று வயதிலேயே குழந்தை தனித்துத் தன்னைச் சுத்தம் செய்து கொள்ளக் கற்றுக் கொள்வது அவசியம்.
விரைவிலேயே நல்ல கழிப்பறை நடத்தையைக் கற்றுக் கொண்ட குழந்தைகள், தன்னை தானே கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப் பண்பினை வளர்த்துக் கொள்ளும், பெற்றோர்களையே எல்லாவற்றுக்கும் சார்ந்திராமல் தனி மனிதனாகத் தன்னை உருவாக்கிக் கொள்ளும்.
இந்தத் தொட்டில் பழக்கமே சுத்தமான வழக்கமாகக் கடைசி வரையிலும் அவர்களைப் பின்பற்றி நிற்கும்.
தன்னார்வலர்களின் உதவியை நாடலாம்: அனைத்துக்கும் அரசு உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது. இதனால், தண்ணீர் தட்டுப்பாட்டைச் சரிசெய்யவும், கழிப்பறை பராமரிப்புக்கும் தன்னார்வ அமைப்புகளின் உதவியை அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் நாடலாம்.
பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் அமைப்பு, அரிமா, ரோட்டரி சங்கங்களின் உதவி மூலம் சில அரசு பள்ளி, கல்லூரிகள் தனியார் கல்வி நிலையங்களுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. அதேபோன்ற முயற்சியை அனைத்து அரசு, பள்ளிகளிலும் தொடங்கலாம் என்கின்றனர் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.