நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில், நடைபெற்ற 15-ம் ஆண்டு அறுபத்து மூவர் பெருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவபக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தி, ஊர்வலமாகச் சென்றனர்.
ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் அறுபத்து மூவர் பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில், ஜூலை 20, 21 ஆகிய இரு நாள்கள் இந்த விழா நடைபெற்றது.
ஜூலை 20 -ம் தேதி விழா தொடக்கத்தில் விநாயகர், முருகர், நந்தியம்பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், திருமுறை பாராயணம், பேரொளி வழிபாடு, சிறப்பு சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. பின்னர் தீக்கை விழா, கரூர் அரசு இசைப்பள்ளி தேவார ஆசிரியர் சாமிநாத தேசிகரின் திருமுறை இன்னிசை நிகழ்வு நடந்தது.
பின்னர் ஜூலை 21-ல் சிறப்பு வழிபாடுகள், பன்னிரு திருமுறை ஊர்வலம், சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடந்தன. மாலை ஐம்பெரும் மூர்த்திகள், பிச்சாடனார், அறுபத்தி மூவர் கயிலாய வாத்தியங்கள் வாண வேடிக்கைகள் முழங்க சிவபக்தர்கள் ஆடல் பாடல்களுடன் திருவீதி உலா வந்தனர். இந்த விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவ தொண்டர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








