பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே திருமணமான இரண்டாவது நாள் காணாமல் போன புது மாப்பிள்ளையை அழுகிய நிலையில் பூசாரிபாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே சடலமாக மீட்டு பரமத்தி வேலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர் வட்டம்,பாண்டமங்கலம் அருகே உள்ள வேலாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவ அம்மாசி மகன் மணி (25) கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகள் சுகன்யாவுக்கும் (24) கடந்த 19-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த 21-ஆம் தேதி மணி வீட்டைவிட்டு கழிவறைக்குச் சென்று வருவதாக கூறிச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சுகன்யா அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். மணியின் பெற்றோர், சுகன்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் மணியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மணி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சில நேரங்களில் வீட்டைவிட்டு வெளி ஊர்களுக்கு சென்றுவிடுவது வழக்கமாம். இந்த நிலையில், புதன்கிழமை காலை பூசாரிபாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு கீழ்ப்பகுதியில் மணியின் உடல் கிடப்பதாக அவரது பெற்றோருக்கும்,பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பரமத்தி வேலூர் போலீஸார் அழுகிய நிலையில் கிடந்த மணியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மணி எவ்வாறு இறந்தார், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.