பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் 865 பயனாளிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் ஞாயிற்றுக்கிழமை வழங்கி திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.
மோகனூர் வட்டார வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், முதல் தவணையாக, மோகனூர் வட்டாரத்தில் தகுதிபெற்ற 50 விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், தலா 50 பேர் வீதம் நிதியுதவி பெறுவதற்கான சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. மொத்தம் 15 ஒன்றியங்களில் 750 பேருக்கு நிதியுதவி பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், 115 விவசாயிகளுக்கு ஆட்சியர், மக்களவை உறுப்பினர் இருவரும் இணைந்து நிதியுதவி ஆணையை வழங்கினர்.
விழாவில் ஆட்சியர் பேசியது: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் 64 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனைவரின் வங்கிக் கணக்கிலும் ஓரிரு நாளில் பணம் கிடைக்கும். தற்போது 115 பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. நிதியுதவி பெறுவதற்கு பெயர் சேர்க்காமல் விடுபட்டோர், உரிய ஆவணங்களை காண்பித்து தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.
விழாவில், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், மாவட்ட வன அலுவலர் மருத்துவர் இரா.காஞ்சனா, வேளாண் இணை இயக்குநர் ஜெ.சேகர், தோட்டக்கலைத்துறை இயக்குநர் கண்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.