இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தி போராட்டம்

இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த விசைத்தறி, விவசாயத் தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனை கோரி, 2018-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனா். தொடா்ந்து வீட்டுமனைக்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனையடுத்து, கடந்த ஆண்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. ஓராண்டாகியும் எந்தவிதமான அறிவிப்பும் வராததால், வட்டாட்சியா் அலுவலகத்தில் 100 பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் வீட்டுப் பாத்திரம், பொருள்களுடன் குடியேறும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனையடுத்து, அனைவரும் வீட்டுமனை வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பி தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கோக்கலை கிராமத்தில் புறம்போக்கு நிலம் உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று இலவச வீட்டுமனை, பட்டா வழங்க ஏற்பாடு செய்வதாகவும் வட்டாட்சியா் பாஸ்கா் தெரிவித்தாா். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com