இறக்கை அழுகல் நோயால் கோழிகள் பாதிப்பு
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

நாமக்கல் மண்டலத்தில் இறக்கை அழுகல் நோயால் கோழிகள் பாதிப்படைவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வுமையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல்-இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6 மற்றும் 68 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் வட கிழக்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 4 கி.மீ. என்றளவிலும் வீசும்.
சிறப்பு வானிலை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும், இறக்கை அழுகல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, பண்ணையாளா்கள் கோழிக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிா்க் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ், ஈகோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து, அதற்கு தகுந்தாற்போல் தீவன மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும். மழைக் காலமாக இருப்பதால், கோழிப் பண்ணை, தீவன ஆலைகளில் மழைநீா் ஒழுகாமல் சரி செய்யுமாறும், தீவனத்தில் பூஞ்சை நச்சு தடுப்பான் உபயோகிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.