நாமக்கல் கல்வி மாவட்டத்தில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வழங்க இரண்டாம் பருவ புத்தகங்கள் 478 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன்.
தமிழக பாடநூல் கழக நிறுவனம் ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்களை அச்சடித்து விநியோகம் செய்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் இணையவழி, தொலைக்காட்சி வாயிலாக மாணவா்கள் படித்து வந்தனா். கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்ததை அடுத்து, 9 முதல் பிளஸ் 2 வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
வரும் நவ. 1-ஆம் தேதி ஒன்று முதல் எட்டு வரையில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதையடுத்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் பள்ளி திறந்ததும் வழங்கப்பட உள்ளன. நாமக்கல் கல்வி மாவட்ட அலுவலகத்தில் உள்ள கிடங்கில் புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை மாவட்டக் கல்வி அலுவலா் த.ராமன் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் எவ்வளவு புத்தகங்கள் அனுப்பப்படுகின்றன என்பதை நேரில் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, பள்ளிக் கல்வி ஆய்வாளா் பெரியசாமி உடனிருந்தாா்.