ராசிபுரம்: சுதந்திர போராட்ட வீரரும், தியாகியுமான டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு 135-வது பிறந்த தின விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் விடுதலைகளம் அமைப்பு, ராசிபுரம் வட்ட நாயுடு நண்பர்கள் குழு சார்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சுதந்திர போராட்ட காலங்களில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர், சிறந்த தொழிற்சங்கவாதி, சிறந்த பத்திரிகையாளர். தமிழகத்தில் தமிழகம், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிக்கையை துவங்கி பொதுமக்களிடம் சுதந்திர போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்திரிக்கையாளர்.
மகாத்மா காந்தி, வ.உ.சி., பாரதியார், தேவர் திருமகன், மூதறிஞர் ராஜாஜி, பெரியார், சத்தியமூர்த்தி, காமராஜர், போன்ற தலைவர்களுடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்தவர். சென்னை மாகாண சட்டப்பேரவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார். சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவரது பிறந்த தின விழா சொந்த ஊரான ராசிபுரம் நகரில் நடைபெற்றது.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக விடுதலை களம் அமைப்பு, நாயுடு நண்பர்கள் குழு சார்பில் நடந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
மேலும், வரதராஜூலு நாயுடுவிற்கு சொந்த ஊரான ராசிபுரத்தில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்க வேண்டும். முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது. இதற்கு அரசு முன்வந்து நிறைவேற்றி தர வேண்டும். ராசிபுரம் நகரின் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனைக்கு அவரது பெயர் வைக்க வேண்டும் என விடுதலை களம் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, விழாவில் விடுதலை களம் அமைப்பின் நிறுவனர் கொ.நாகராஜன் தலைமை வகித்தார். ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர், நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஏ.சித்திக், நாயுகள் சங்க செயலர் என்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாநிலஙகளவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இதில் பங்கேற்று டாக்டர் வரதராஜூலு திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
இதையும் படிக்க: கரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஜெ.ராதாகிருஷ்ணன்