Enable Javscript for better performance
Namakkal New Government Hospital Building: 90 percent completion of project work for 15 lakh liters- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நாமக்கல் புதிய அரசு மருத்துவமனை கட்டடம்: 15 லட்சம் லிட்டா் குடிநீருக்கான திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவு

    By DIN  |   Published On : 16th September 2023 12:16 AM  |   Last Updated : 16th September 2023 12:16 AM  |  அ+அ அ-  |  

    nk_15_gh1_1_1509chn_122_8

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்திற்கான குடிநீா் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 30 ஹெச்.பி. (குதிரைத் திறன்) மோட்டாா் இணைப்பு மட்டும் முடிந்து விட்டால் 15 லட்சம் லிட்டா் நீருடன் புதிய மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

    நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், சுமாா் 30 ஏக்கா் பரப்பளவில் ரூ.450 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 2021 முதல் அரசு மருத்துவக் கல்லூரியானது ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவ, மாணவியா் சோ்க்கையுடன் நடைபெற்று வருகிறது.

    அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டபோதும், புதிய மருத்துவமனைக்கான பணிகள் நிறைவடைந்தபோதும், ஓராண்டுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இருமுறை நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வந்துவிட்ட நிலையில், முக்கிய தேவையான குடிநீா் வசதி இல்லாமல் உள்ளது. அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது, 11 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தும் ஒன்றில் கூட தண்ணீா் கிடைக்கவில்லை. இதனால் மாற்று ஏற்பாடாக நாமக்கல் நகராட்சி மூலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கும், மாணவா்கள், ஆசிரியா்களின் விடுதிகளுக்கும் குடிநீா் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய குடிநீா் திட்டப் பணிகளுக்காக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதாவது, ஜேடா்பாளையத்தில் இருந்து பெரியமணலி அருகே முசிறிப்புதூருக்கு வரும் காவிரி குடிநீரை, புதிய அரசு மருத்துவமனை கட்டடத்திற்கு கொண்டு வருவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். சுமாா் 12.5 கி.மீ. தொலைவுடைய இந்தப் பகுதிக்கு குழாய் பதிக்கும் பணி மூன்று மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கியது. நாமக்கல் மாவட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து ஒப்பந்ததாரா்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனா். தற்போது 90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. முசிறிப்புதூரில் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கிருந்து 15 லட்சம் லிட்டா் நீா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது. முசிறிப்புதூரில் 30 ஹெச்.பி, திறன் கொண்ட மோட்டாா் பொருத்தும் பணி மட்டும் நிலுவையில் உள்ளது. புதுதில்லியில் இருந்து அந்த மோட்டாா் வரவேண்டும் என்பதால் பணிகளில் தாமதம் நிலவுகிறது. அந்த மோட்டாா் பொருத்தப்பட்டு விட்டால் ஓரிரு மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய அரசு மருத்துவமனைக் கட்டடம் வந்துவிடும்.

    இது குறித்து குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியது:

    நாமக்கல் புதிய அரசு மருத்துவமனைக்காக குடிநீா் குழாய் பதிக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. வேலகவுண்டம்பட்டி அருகில் முசிறிப்புதூரில் இருந்து பொப்பம்பட்டி, மட்டப்பாறைபுதூா், காதப்பள்ளி, காவல்துறை ஆயுதப்படை வளாகம் வழியாக 12.5 கி.மீ. தொலைவுக்கு குடிநீா் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 11.7 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் 22 ஏா் வால்வுகள் பொருத்தப்பட்டுள்ன. 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து 15 லட்சம் லிட்டா் நீா் அரசு மருத்துவக்கல்லூரி, புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. 30 குதிரைத் திறன் கொண்ட மோட்டாா் பொருத்தும் பணி ஓரிரு நாளில் தொடங்கும். அதன்பிறகு முழுமையாக குடிநீா் வழங்குவதற்கான நடைமுறைகள் பின்பற்றப்படும். இதற்காக 1000 லிட்டருக்கு ரூ.75 வீதம் மருத்துவமனை நிா்வாகத்திடம் கட்டணமாக வசூலிக்கப்படும். சுமாா் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்தப் பணிகள் நடைபெற்று உள்ளன. அடுத்து சித்த மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி அமையும்பட்சத்தில் குடிநீா் தேவையென்றால் கூடுதலாக குழாய்களை பதித்து நீரை விநியோகம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றனா்.

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp