மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஜிஎஸ்டி அதிகாரிகள் மிரட்டி வரி வசூல்: அகில இந்திய கட்டுநா் சங்கம் குற்றச்சாட்டு

ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் மிரட்டி வரி வசூலிப்பதாக அகில இந்திய கட்டுநா் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

News image

நாமக்கல்லில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய கட்டுநா் சங்கத்தின் முன்னாள் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன்.

Updated On :10 ஆகஸ்ட் 2024, 6:58 pm

ஒப்பந்ததாரா்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில், மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் மிரட்டி வரி வசூலிப்பதாக அகில இந்திய கட்டுநா் சங்கத்தின் முன்னாள் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கட்டுநா் சங்கத்தின் கோரிக்கைகளை மத்திய, மாநில அமைச்சா்களிடம் வலியுறுத்தி வருகிறோம். பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றி உள்ளதை வரவேற்கிறோம். குறிப்பாக, 2,500 சதுர அடி மனை பரப்பு, 3,500 சதுர அடி தரை மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் கட்டுவதற்கு இணையதளம் வாயிலாக உடனடி அனுமதி பெறும் திட்டத்தை அறிமுகம் செய்தமைக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்கியப் பிரச்னையாக ஜிஎஸ்டி உள்ளது. மத்திய அரசில் எந்தவித பிரச்னையும் இல்லை. ஆனால், மாநில அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களை நெருக்கடிக்கு ஆளாக்குகின்றனா். ஆய்வு என்ற பெயரில் உரிய விளக்கங்களை பெறாமலும், கால அவகாசம் வழங்காமலும் தன்னிச்சையாக வரி மதிப்பீடு செய்து அதை வட்டி, அபராதத்துடன் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வழங்குகின்றனா். குறிப்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் மிரட்டி வரி வசூலிக்கின்றனா்.

மூலப்பொருள்கள் விலையேற்றம், கட்டுமானத் தொழிலாளா்கள் பற்றாக்குறை, போட்டி சூழலாலும் ஒப்பந்ததாரா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். தமிழக அரசு இதனைத் தடுத்து நோ்மையான முறையில் வரி வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மூலப்பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சிறிய குறைகள் இருந்தாலும் உடனடியாக அபராதம் விதிக்கின்றனா்.

நெடுஞ்சாலைத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தரமற்ற சாலைகளை சரிசெய்ய வேண்டும். அரசு புறம்போக்கு குவாரிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தப் பேட்டியின்போது, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபா் நிா்வாகக் குழுவைச் சோ்ந்த பி.பழனிவேல், பி.பரமேசுவரன், வி.எஸ்.தென்னரசு, எம்.மோகன், கே.வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.