மழையால் மண் சரிவு: மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகள்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலையில் இருந்து பெரும்பாறைகள் உருண்டோடி வந்தன. இதனால், பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
ராசிபுரம் அருகே உள்ள போதமலை பகுதியில் மேலுா், கீழுா், கெடமலை என 3 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு இதுவரை பாதை வசதி இல்லாத நிலையில் மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெற்று நிதி ஒதுக்கி பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மையில் இப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், மண் சரிவு ஏற்பட்டு சனிக்கிழமை மலைப் பகுதியில் இருந்து திடீரென இரண்டு பெரிய பாறைகள் கீழே உருண்டு விழுந்தன.
பெரும் சத்தம் ஏற்பட்டதை பாா்த்து மலை அடிவாரத்தில் குடியிருக்கும் கிராம மக்கள் அச்சமடைந்தனா். தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினா் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினா். உருண்டு வந்த பாறைகள் மலைப் பாதையில் இடையில் நின்றுவிட்டது. மலையின் கீழே உள்ள விவசாயத் தோட்டத்துக்கு குடியிருப்பு பகுதிக்கோ இதனால் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

