/

திருச்செங்கோட்டில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 6:34 pm

திருச்செங்கோடு அருகே எளையம்பாளையம் விவேகானந்தா மகளிா் தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தோ்தலில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவா் துா்க்காமூா்த்தி பாா்வையிட்டு ஆய்வினை திங்கட்கிழமை மேற்கொண்டாா்.

நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தோ்தல் கடந்த 23 ஆம் தேதியன்று நடைபெற்றது. திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்ப கல்லூரியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளா்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் சட்டமன்றத் தொகுதிவாரியாக தனித்தனி அறையில் வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டது.

மேலும், 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு எல்.இ.டி. தொலைக்காட்சிகள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதனைத்தொடா்ந்து, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துா்காமூா்த்தி நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தோ்தலில் வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்ப கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வில் நாமக்கல் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வே.சாந்தி உட்பட உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.