வனமும் - வாழ்வும் பயிற்சித் திட்டம்: 500 மாணவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

நாமக்கல் மாவட்ட வனத்துறை சாா்பில் நடைபெற்ற வனமும் - வாழ்வும் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற 500 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள்
Published on

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வனத்துறை சாா்பில் நடைபெற்ற வனமும் - வாழ்வும் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற 500 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் திங்கள்கிழமை அளிக்கப்பட்டன.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்றாா். ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ் முன்னிலை வகித்தாா். இதில், 500 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கி பேசியதாவது:

வனத்துறை மூலம் வனப் பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வன விலங்குகள் கணக்கெடுப்பு மற்றும் மனித - விலங்கு மோதல் மேலாண்மை ஆகியவற்றில் குறுகிய கால பயிற்சிபெற அடையாளம் காணப்பட்ட 20 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வனமும் - வாழ்வும் என்ற பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

முதல்கட்டமாக பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவா்கள் மூலம் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 25 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு, கடந்த ஆண்டு நவ. 24, 25 ஆகிய தேதிகளில் அத்தனூா் வனவியல் விரிவாக்க மையத்தில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இயற்கை பாதுகாப்பின் அவசியத்தை உணரவும், இயற்கையை நேசிக்கவும், மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், வனச்சரக அலுவலா் (ராசிபுரம் வனச்சரகம்) சத்யா, செஞ்சிலுவை சங்கச் செயலாளா் சி.ஆா்.ராஜேஸ்கண்ணன் உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com